யாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் தொடருந்துடன் மகிழுந்து மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த தொடருந்தை பொருட்படுத்தாமல் கச்சேரி-நல்லூர் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை மேற்படி இளைஞர்கள் மகிழுந்தில் கடக்க முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பொறியியலாளரான எஸ்.சுதாகரன் (வயது41) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஆதவன் (வயது28), அரவிந்தன் (வயது28), கம்பதாஸன் (வயது23) என்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் கச்சேரி-நல்லூர் வீதி தொடருந்து கடவைக்கு பாதுகாப்பு கதவு இல்லாமையினாலேயே விபத்து சம்பவித்ததாகவும், தொடருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பவில்லை எனவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்கு உள்ளான மகிழுந்து கச்சேரி நல்லூர் வீதியில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு சோமசுந்தரம் அவென்னியு கடவையில் வீசப்பட்டுள்ளது.