ஈழத்து மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கலாபூசணம் ச.கதிரவேலுவின் இறுதிக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை (20-11-2015) இன்று அளவெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுப் பிற்பகல் -2 மணிக்கு அளவெட்டியிலுள்ள இந்து மயானத்தில் சோகங்கள் சூழ அவரது புகழுடல் தீயுடன் சங்கமமானது.
அவரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அளவெட்டி மகாஜனசபையின் தலைவர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்ற இரங்கல் உரை நிகழ்வில் மூத்த படப்பிடிப்பாளர் எஸ்.திருநாவுக்கரசு, தெல்லிப் பழை துர்க்காதேவி ஆலயம் சார்பில் மூத்த ஆன்மீக வாதி கா.சிவபாலன் ,தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ் .சபேஸ்வரன், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில் நாதன், யாழ்.ஊடக அமையத்தைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.தயாபரன், மூத்த ஊடகவியலாளர் எஸ் -கதிர்காமத் தம்பி, ஊடகவியலாளர் எஸ்.வாமதேவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீருடனும், ஆறாத துயரத்துடனும் கதிரவேலு ஐயாவின் உன்னதமான ஊடகப் பணி தொடர்பிலும், தம்முடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து உறவுகள், கூடியிருந்தவர்களின் கண்கள் பனிக்க அவரது இல்லத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலிருந்த மயானத்துக்கு அவரது புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவரது புகழுடல் தீயுடன் சங்கமமானது. காரில் வைக்கப்பட்டு ஊர்வலமாக அவரது பேழை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் இல்லத்திலும், மயானம் செல்லும் வீதியிலும் அவரது புகழுடல் தாங்கிய பேழையை சக ஊடகவியலாளர்களே தமது தோள்களில் காவிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.அவர் ஊடகப் பணியில் சிறப்பான சேவைகள் ஆற்றியமைக்காக பெற்ற விருதுகள் அவரது இல்லத்தில் இன்று காட்சிப்படுத்தப்பட்டுமிருந்தன.
அவரது இறுதிச் சடங்கு நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், பா.கஜதீபன், வலி.வடக்கின் முன்னாள் துணைத் தவிசாளர் ச.சஜீவன், மற்றும் பல சிரேஸ்ட, இளம் ஊடகவியலாளர்கள் , உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
சிரேஸ்ட புகைப்பட ஊடகவியலாளரான கதிரவேலு தன்னுடைய இளமைக் காலத்தில் தினகரன் பத்திரிகையின் யாழ்.பிராந்திய புகைப்பட ஊடகவியலாளராகக் கடமையாற்றியதுடன், பின்னர் இறக்கும் வரை சுயாதீன புகைப்பட ஊடகவியலாளராகவும், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளராகவும் இறுதிவரை சளைக்காமல் பணியாற்றி வந்தார். அவரது புகைப்படங்கள் கதை பேசுபவனாகவும், புகைப்படக் கலையின் நுணுக்கங்களுக்கு உட்பட்டதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. 84 வயதான போதும் தளராது தான் நேசித்த ஊடகப் பணியை செவ்வனே ஆற்றி வந்த கதிரவேலு ஐயா சக ஊடகவியலாளர்களுடன் நட்புடன் பழகும் ஒருவர். சக ஊடகவியலாளர்கள் மீது பொறாமை கொண்ட சில ஊடகவியாளர்கள் எம் மத்தியில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் வளர்ந்து வரும் ஊடகவியலார்களுக்கு நல் அறிவுரைகள் கூறுவதுடன் அவர்களை தட்டிக் கொடுக்கும் பெருமகனாகவும் திகழ்ந்தார்.