எமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதை எவராலும் தடுக்க முடியாது – கஜேந்திரன்

0
150

உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவம் என்றால் அது சிறிலங்கா இராணுவமாக தான் இருக்க முடியும். ஏனென்றால் அவர்கள் தான் இன்று வடக்கு கிழக்கில் எமது தாயக பூமியில் துயிலும் இல்லங்களில் தங்கி இருந்து நினைவேந்தல்களை செய்யவிடாமல் தடுத்து வருகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எத்தனை தடைகள், கெடுபிடிக்கள் வந்தாலும், எது எவ்வாறாக இருந்தாலும் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறும். துயிலும் இல்லங்களுக்கு செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட இடங்களை அண்மித்தவாறு எமது நிகழ்வுகளை முன்னெடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“மாவீரர்களை நினைவு கூரும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவீர்களை நினைவு கூருகின்ற புனிதமான மாதம் இந்த மாதம், இம்மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைந்திருக்கக்கூடிய துயிலும் இல்லங்களிலும் மக்களுடைய வீடுகளிலும் மாவீரர்களுக்கு தீப சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் புனிதமான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

அந்த வகையிலே மாவீரர்களின் நினைவிடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அத்தோடு அது சம்பந்தமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

சில இடங்களில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு, இடையூறுகள் காணப்படுகிறன. அவர்கள் இருக்கும் இடத்திற்கு முன்பாக மாவீரர்களின் நிகழ்வுகளை நடத்த ஆயத்தமாகி வருகின்றோம்.

சில இடங்களில் மாவீரர்களின் நினைவுத் தூபிகள் காணப்பட்ட இடத்தை உடைத்து எடுத்து விட்டு அந்த இடத்தில் இராணுவ முகாம்களை அமைத்து அங்கு நிலை கொண்டிருப்பதையும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

துயிலும் இல்லங்களுக்கு கொடுக்க வேண்டிய வணக்கங்களை நாங்கள் அவ்விடத்தில் இருந்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையிலே கோப்பாய் வடமராட்சி கொடிகாமம், பருத்தித்துறை வீதியில் அமைந்திருக்கக் கூடிய துயிலும் இல்லத்திற்கு முன்பாகவும் இந்த ஏற்பாடுகள் நடைபெறவுள்ளன.

இதேபோன்று வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த ஏற்பாடுகளை செயல்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதோடு, பொது மக்களாலும் மாவீரர் தின ஏற்பாட்டு குழுவினராலும் வேலைத்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன.

நாங்களும் இந்த ஏற்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதேநேரம் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

அதையும் மீறி எமது மாவீரர்களுக்கு மரியாதை, வணக்கத்தை செலுத்துவதை எவராலும் தடுக்க முடியாது தடையின்றி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் நாங்கள் முன்னெடுத்து வருவோம்” என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here