
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பரந்தன் சந்திக்கருகில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பரந்தன் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது அக்காவின் மகன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை நான்கு பேர் கொண்ட குழுவினர் தலைக் கவசத்தினால் தாக்கிக்கொண்டிருந்த போது,தான் அதனை தடுக்க சென்றதாகவும் இதன் போது தன்னை அவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டியதனால் தான் காயமடைந்தாகவும், பின்னர் அவர்கள் அவ்விளைஞனை வெட்டிக் கொலை செய்ததாகவும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய (02) தினம் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி பொலிஸாரும், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவானும் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, அங்குள்ள நிலைமைகளையும் ஆராய்ந்துள்ளனர்.
இதேவேளை, கொலையாளிகள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
குறித்த இளைஞனின் மரணத்துக்கு நீதிகோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று திங்கட்கிழமை முழு நாள் கதவடைப்புப் போராட்டம் இடம்பெறுகிறது.