
உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பணியாளர்களுக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் தலைமை அலுவலகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொரோனாத் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவினருடன் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதயன் பணியாளர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
2006ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி, ஊடக சுதந்திர தினத்துக்கு முதல் நாள் இரவு உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விற்பனை முகாமையாளர் பஸ்ரியன் ஜோர்ச் சகாயதாஸ் (சுரேஷ்), பணியாளர் ராஜரட்ணம் ரஞ்சித்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். பெறுமதிமிக்க உபகரணங்கள் அழிக்கப்பட்டன.
குடாநாடு முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருந்தது. இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துள்ளபோதும், இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்கள் கைது செய்யப்படவுமில்லை, தண்டிக்கப்படவுமில்லை.