பிரான்சில் 31.05.2015 ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்த, யாழ்ப்பாணம், தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பிரான்சு Neuilly – sur -Marne நகரினை வதிவிடமாகக் கொண்டவரும், Neuilly – sur -Marne தமிழ்ச்சங்கத்தின் முன்னை நாள் தலைவராகவும் (1997 – 2001) பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னை நாள் தலைவராகவும் (2013 – 2015) இருந்த நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா (துரை) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை மிக உணர்வுபூர்வமாக Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris பகுதியில் இடம்பெற்றது.
முன்னதாக நேற்று காலை 8 மணிமுதல் 10.30 மணிவரை அன்னாரின் புகழுடல் Maison Funérarium Ménilmontant, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris பகுதியில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் தகனக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்கு புகழுடல் தாங்கிவரப்பட்டு அங்குவைத்து நினைவுரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரெஞ்சுக்கிளையினர் கந்தையா சிவராஜா அவர்களின் தாயகத்தின் மீதான பற்றுறுதியை மையப்படுத்தியும் அவரின் செயற்பாடுகளையும் கருத்தில் கொண்டு நாட்டுப் பற்றாளர் என்று மதிப்பளித்து அன்னாரின் புகழுடலுக்கு தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. போர்த்தப்பட்ட தேசியக்கொடியை அன்னாரின் துணைவியாரிடம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் வழங்கிவைத்தார்.
புகழுடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் காணொளியில் அன்னாரின் கடந்த காலங்களை நினைவூட்டும் ஒளிப்படங்கள் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அது அனைவரையும் கண் கலங்கவைத்தது. அத்துடன் ரிரிஎன் தமிழ் தொலைக்காட்சியினால் தொகுக்கப்பட்ட அவரது நேர்காணல் காண்பிக்கப்பட்டது.
பிரான்சு உட்பட ஏனைய நாடுகளில் இருந்தும் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் வருகைதந்து நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களுக்கு இறுதிவணக்கம் செலுத்தினர். முற்பகல் 11.30 மணியளவில் அன்னாரின் புகழுடல், குடும்பத்தினர் மற்றும் உறவுகளின் கண்ணீர் வணக்கத்துடன் தீயினில் சங்கமமானது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு