அபூர்வமானதும் முழுமையானதுமான சூரிய கிரகணம் 16 வருடங்களுக்குப் பிறகு இன்று நிகழவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை பி.ப. 01.11 தொடக்கம் மாலை 5.20 வரைக்கும் ஏற்படவுள்ள இந்த சூரிய கிரகணத்தால் ஐரோப்பிய நாடுகள் சில இருளில் மூழ்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் இலங்கையில் இந்த சூரிய கிரகணம் தென்படாது என்பதுடன் இலங்கையில் இதனது தாக்கமும் இருக்காது என்று
ஆதர் சி. கிளாக் நிறுவகத்தின் கடமைநேர வானியல் நிபுணர் தொிவித்தார். இதனால், வழக்கமாக கிரகணங்களின் போது பாதுகாப்பாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றரோ் இன்றைய கிரகணம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுப்பர் மூன் என்ற அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணம் இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நிகழவுள்ள இந்த அபூர்வ கிரகணமானது லண்டன், நோர்வே உள்ளடங்கலாக பல்வேறு ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டினேவிய நாடுகளிலும், பராயா தீவுகளிலும், ஆபிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தின் சில நாடுகளிலும் தென்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றுள் சில நாடுகளில் சூரிய ஔி 80 வீதம் வரை குறைவடைந்து இருள்மயமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.
இதேபோன்றதொரு சூரிய கிரகணம் இதற்குப் பிறகு 2026ஆம் ஆண்டிலேயே ஏற்படும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆய்வாளர்கள் நோர்வேக்கு படையெடுப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தரன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இது மீண்டும் 2053 மற்றும் 2073 ஆம் ஆண்டுகளில் உலகத்திற்கு தென்படுமென்றும் எதிர்காலத்தில் சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரத்தை பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் இந்த சூரிய கிரகணம் விஞ்ஞானிகளின் கண்களை திறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்