
கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் உள்ள வீட்டில் வைத்து நாகராசா சிவசீலன் என்பவர் தனது மனைவியான சிவசீலன் யேசுதா (வயது 28) வை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மதுபோதையில் தினமும் மனைவியை துன்புறுத்தி வந்த கணவர் சம்பவ தினத்தன்று ஆத்திரம் தாங்க முடியாமல், தனது மனைவியை கோடரியால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்ததுடன், பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். விளக்கமறியலில் இருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. மேற்படி வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.